Dec 3, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 18 : நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு : இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு – தொடர்ச்சி)

நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ அடுத்து வல்லினம் மிகும் எனப் பார்த்தோம் அல்லவா? அதனால், நாளைக்கு, இன்றைக்கு, நேற்றைக்கு, தொடக்கத்திற்கு, முடிவிற்கு, முன்பு குறிப்பிட்டவாறு இடைவேளைக்கு அடுத்தெல்லாம் வல்லினம் மிகும்.  எனவே, பின்வருமாறு தொடர்கள் அமையும்.

நாளைக்குத் தொடக்கம்

இன்றைக்குத் தேர்வு

நேற்றைக்குப் பார்த்தது

தொடக்கத்திற்குப் பின்னர்

முடிவிற்குப் பிறகு

நாளைக்குத் திறப்பு விழா

நாளைக்குத் தொடங்கியதும்

நாளைக்குச் செல்லும் பொழுது

நாளைக்குப் பாடம் எடு

நாளைக்குப் பிறந்த நாள்

நாளைக்குச் சென்றதும்

நாளைக்குச் செல்லும் பொழுது

நாளைக்குத் திருமணம்

நாளைக்குப் பதியவும்

நாளைக்குக் கொடுக்கவும்

இன்றைக்குப் படித்த பின்னர்

இன்றைக்குப் படியெடுக்கவும்

இன்றைக்குப் போ

இன்றைக்குப் புகுவிழா

இன்றைக்குத் திரையிடுக

இன்றைக்குக் கல்லூரி விடுமுறை

இன்றைக்குப் பள்ளி விடுமுறை

இன்றைக்குச் சட்ட மன்றத்தில்

இன்றைக்குச் சட்டப் பேரவையில்

இன்றைக்குப் பேய்மழை

நேற்றைக்குக் கடும் வெயில்

நேற்றைக்குக் கோயிலில்

நேற்றைக்குப் பெய்த மழையில்

நேற்றைக்குச் சூழல்

நேற்றைக்குத் தொடங்கியதும்

நேற்றைக்குப் பிரித்தனர்

நேற்றைக்குப் பேறுகாலம் முடிந்ததும்

நேற்றைக்குக் காவல் நிலையத்தில்

நேற்றைக்குப் பெற்றோர் சந்திப்பில்

நேற்றைக்குத் துணிக்கடையில்

நேற்றைக்குக் கையூட்டு பெற்றதால்..

நேற்றைக்குக் கரம் பிடித்தவர்

தொடக்கத்திற்குப் பின்னர்

தொடக்கத்திற்குச் செல்க

முடிவிற்குப் பிறகு

முடிவிற்குப் பிறகும்

இவ்வாறு வல்லெழுத்து மிகும் இடங்களை அறிந்தால் பிழையின்றிப் பேசவும் எழுதவும் இயலும்.

Nov 6, 2025

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள் : இலக்குவனார் திருவள்ளுவன்




(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : : case, bail, receipt – தமிழில்:  தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 17 : உடைமையாளர், உரிமையாளர் வேறுபாடு + சொல்லுதல் வகைகள்

? ‘Possessor of the land’ ‘owner of the Land;’ என்பனவற்றிற்கு என்ன சொல்லவேண்டும் எனக் கோட்டாசியர் அலுவலகத்தில் இருந்து ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

*** நல்ல கேள்வி. ஏனெனில் இரண்டிற்குமே நில உரிமையாளர் எனப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

‘Possessor of the Land’ என்றால் நில உடைமையாளர் என்றும்

owner of the Land’ என்றால் நில உரிமையாளர் என்றும் வேறுபடுத்திக் கூற வேண்டும். இருநிலையிலும் ஒருவரே இருக்கலாம். வெவ்வேறாகவும் இருக்கலாம். எனவே, இவ்வாறு நிலத்திற்கு உரிமையாளரை உரிமையாளராகவும் உரிமையாளராக இல்லாமல் பயன்பாட்டில் வைத்திருப்பவரை உடைமையாளர் என்றும் சொல்லுவதே சரியாகும்.

இக்கோப்பில் பிரேத விசாரணை அறிக்கை எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Inquest என்பதற்கு உசாவுதல் எனப் பொருள். என்றாலும் இங்கு இச்சொல் பிண ஆய்வு குறித்துக் குறிக்கின்றது. எனவே, பிண ஆய்வு அறிக்கை எனக் குறிக்க வேண்டும்.

? ஆங்கிலத்தில் ஒரு சொல்லில் குறிக்கப்படுவது தமிழில் இரண்டு, மூன்று சொற்சேர்க்கையாக உள்ளதே!

*** தமிழில் ஏழு எழுத்துக்களுக்கு மேல் எந்தத் தனிச் சொல்லும் இல்லை. இயற்கைப் பெயர்கள், உயிரினப் பெயர்கள் முதலியன மரம், செடி, கொடி, வேர், கொடி, கிளை, பூ, இதழ், காய், கனி, நாய், பரி, கரி, புலி, மான், ஆடு, மாடு, கிளி, குயில், மயில், முதலை, பாம்பு, பல்லி, குருவி, காகம் என்பன போன்று மிகுதியானவை பெரும்பாலும் நான்கு எழுத்துகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

நாம் தமிழ்ச் சொற்களில் உள்ள நுண்ணிய வேறுபாடுகளை உணராமலும் அயற்சொல் கவர்ச்சியாலும் தமிழை மறந்தமையால் சுருங்கிய சொல்லுக்கு மாற்றாக விரிந்த தொடரைக் கூறும் இழிநிலை ஏற்படுகிறது.

சுருக்கமான தமிழ்ச் சொற்கள் பல இருப்பினும் ஆங்கிலம் வழியாக எண்ணும் பழக்கம் வேரூன்றியமையால் விரிவாகத் தமிழில் கூறுகின்றோம்.

தமிழில் சொல்லுதல் என்பதற்கு இயம்பல், விரித்தல், மொழிதல், விளம்பல், பகர்தல், பன்னல், நவிறல், கத்துதல், உரைத்தல், கூறல், வாங்கல், குயிலல், புகர்தல், பேசல், நொடிதல், பிறழ்தல், பறைதல், செம்பல், அதிர்தல், பணித்தல், சொற்றல், ஆடல், எனப் பல பொருள்கள் உள்ளமையைப் பிங்கல நிகண்டு கூறுகிறது.

இவற்றில் ஒவ்வொன்றிற்கும் பல பொருள்கள் உள்ளன. சான்றாக இயம்பலைப் பார்ப்போம்.

கதையும் நுவலும் காதையும் கிளவியும் பணுவலும் அறையும் பறையும் வாணியும் கூற்றும் மொழியும் குயிற்றும் புகறலும் மாற்றமும் மறையும் நொடியும் பரவலும் இசையும் இயமும் பேச்சும் உரையும் எதிர்ப்பும் என்றிவை இயம்பல் ஆகும்” எனப் பிங்கல நிகண்டு 21 பொருள்களைக் கூறுகின்றது.

? அவ்வாறு சொல்லுதலைக் குறிக்க எத்தனைச் சொற்கள் உள்ளன?

அவ்வாறு பல சொற்கள் உள்ளன.  39 சொற்களை மட்டும் பார்ப்போம். இங்கே சொல்லப்போகும் சொற்களுக்கு மேலும் பல பொருள்களும் உள்ளன. இருப்பினும் ஒவ்வொரு பொருளை மட்டும் பார்ப்போம்.

  • அசைத்தல் – அசையழுத்தத்துடன் சொல்லுதல் (அசையழுத்தம்-accent);

  • அறைதல் – அடித்து (வன்மையாக மறுத்து);ச் சொல்லுதல்

  • இசைத்தல் – ஒசை வேறுபாட்டுடன் சொல்லுதல்

  • இயம்புதல் – இசைக் கருவி இயக்கிச் சொல்லுதல்

  • உரைத்தல் – அருஞ்சொற்கு அல்லது செய்யுட்குப் பொருள் சொல்லுதல்

  • உளறுதல் – ஒன்றிருக்க ஒன்றைச் சொல்லுதல்

  • என்னுதல் – என்று சொல்லுதல்

  • ஒதுதல – காதிற்குள் மெல்லச் சொல்லுதல்

  • கத்துதல் – குரலெழுப்பிச் சொல்லுதல்

  • கரைதல் – அழைத்துச் செல்லுதல்

  • கழறுதல் – கடிந்து சொல்லுதல்

  • கிளத்தல் – இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லுதல்

  • கிளத்துதல் – குடும்ப வரலாறு சொல்லுதல் குயிலுதல்,

  • குயிற்றுதல் – குயில்போல் இன்குரலில் சொல்லுதல்

  • குழறுதல் – நாத் தளர்ந்து சொல்லுதல்

  • கூறுதல் – கூறுபடுத்திச் சொல்லுதல்

  • சாற்றுதல் – பலரறியச் சொல்லுதல்

  • செப்புதல் – வினாவிற்கு விடை சொல்லுதல்

  • நவிலுதல் – நாவினால் ஒலித்துப் பயிலுதல்

  • நுதலுதல் – ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்

  • நுவலுதல் – நூலின் நுண்பொருள் சொல்லுதல்

  • நொடித்தல் – கதை சொல்லுதல்

  • பகர்தல் – பாண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்

  • பறைதல் – மறை(இரகசியம்); வெளிப்படுத்திச் சொல்லுதல்

  • பன்னுதல் – நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்

  • பனுவுதல் – செய்யுளிற் புகழ்ந்து சொல்லுதல்

  • புகலுதல – விரும்பிச் சொல்லுதல்

  • புலமபுதல – தனக்குத் தானே சொல்லுதல்

  • பேசுதல் – ஒருமொழியிற் சொல்லுதல்

  • பொழிதல் – இடைவிடாது சொல்லுதல்

  • மாறுதல் – உரையாட்டில் மாறிச் சொல்லுதல்

  • மிழற்றுதல் – மழலைபோல் இனிமையாய்ச் சொல்லுதல்

  • மொழிதல் – சொற்களைத் தெளிவாகப்பலுக்கிச் சொல்லுதல்

  • வலத்தல் – கேட்பார் மனத்தைப் பிணிக்கச் சொல்லுதல்

  • விடுதல் – மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்

  • விதத்தல் – சிறப்பாய் எடுத்துச் சொல்லுதல்

  • விள்ளுதல் – வெளிவிட்டுச் சொல்லுதல்

  • விளைத்துதல் – (விவரித்துச்); சொல்லுதல்

  • விளம்புதல் – ஒர் அறிவிப்பைச் சொல்லுதல்

இத்தகைய தமிழ்ச் சொல் வளம் நம் அறிவு வளத்தையும் பண்பாட்டு வளத்தையும் நன்றாக உணர்த்துகின்றது. நமக்கே உரிய சொல்வளத்தைத் துறந்து விட்டு அயல்மொழியிடம் கடன் வாங்கி நம்மை நாமே இழிவாக நடத்திக் கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும். “இனியேனும் நமது வளங்களை நாம் இழக்கக்கூடாது’ என உறுதி எடுத்துத் தமிழில் பேசும்பொழுது தமிழிலேயே பேசினாலும் தமிழில் எழுதும்பொழுது தமிழிலேயே எழுதினாலும்  தமிழில்  சுருக்கமாகவே விளக்க இயலும்

  00

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 16 : case, bail, receipt – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: தொடர்ச்சி)


? case என்றால் என்ன பொருள்?


நீங்கள் எந்தத் துறை?

? மருத்துவத் துறை. case என்றால் வழக்கு என்கிறோமே. மருத்துவமனையில் case-history ஐ எவ்வாறு குறிப்பிடுவது?

‘case’ என்றால் பொதுவாக வழக்கு என்பதை நாமறிவோம். நிலை, நிலைமை, சூழ்நிலை, என்றும் பொருள்களுண்டு. எனவே, மருத்துவத்துறையில் நோய் நிலைமை, நோயர் நிலைமை என்பனவற்றைக் குறிக்கிறது. நிகழ்ச்சியையும் குறிக்கும். எனவே, நேர்வு, நேர்ச்சி, நிகழ்வுக்கூறு, நிகழ்வினம், நேர்வு வகை எனப் பல பொருள்களில் வருகிறது. வேற்றுமையையும் குறிக்கும். எனவே எட்டு வேற்றுமை உருபுகளிலும் வேற்றுமை என்ற பொருளில் வரும். பை, உறை, கூடு, பெட்டி என்ற பொருள்களிலும் வரும். செய்தி, காரியம், கேள்விக்குரிய பொருள், ஆராய்ச்சிக்குரிய பொருண்மை, தறுவாய், பண்பின் செயல்வடிவ நிகழ்வுக்கூறு, எடுத்துக்காட்டாகக் கொள்ளத்தக்க கூறு, தொழில்முறை தொகுதி, சுவர் முகப்புப் பொதிவு, புத்தக மேலட்டை, புத்தக மூட்டுப்பகுதி, அச்சகப் பொறுக்குத் தட்டு, சிதறு வெடியுறைக்குண்டு என மேலும் பல பொருள்கள் உள்ளன. வினைச்சொல்லாக வருகையில் பையில் போடு, உறையில் வை, பொதி, போர்த்து, தோலிட்டு மூடு என இடத்திற்கேற்ப பொருள் வரும்.

case-history நோய் நிலைக் குறிப்பு, நோய் வரலாறு என்னும் பொருளில் வரும். இதனை நோயாறு எனப் புதுச் சொல்லாகக் குறிக்கலாம். case-history என்பது குற்றவியலிலும் வரும். அதனால் சட்டத்துறை, காவல்துறை, நீதித்துறையில் இச்சொல் இடம் பெறும். இங்கெல்லாம் வழக்கு விவரம் என்னும் பொருளில் வருகிறது. சில இடங்களில் புலனாய்வு விவரம் என்றும் பொருள்படும். ஆளைச்சுட்டிக் கூறுவதாயின் வழக்கர் விவரம் எனலாம். இத்துறைகளில் நோயாறு என்பதுபோல் வழக்காறு என்று சொல்லக்கூடாது. சொன்னால் பொருள் பழக்கவொழுக்கம் என மாறிவிடும்.

மேலும், வழக்கத்தில் case என்னும் பொழுது அந்த case எவ்வாறு உள்ளது? இந்த case நிலையில் முன்னேற்றம் இல்லை என்பது போல் நோயின் தன்மையின் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு இல்லாமல், இந்த நோயர் நிலையில் முன்னேற்றம் உள்ளது; அந்த நோயர் நிலை மோசமாகிக் கொண்டு வருகிறது; என நோயர் அடிப்படையில் குறிப்பது நன்றாக இருக்கும்.

? suit case என்று கூறுகிறோமே…
பெட்டி என்னும் பொருளில் உடைப்பெட்டி என்று சொல்லலாமே. இது போல் brief case சிறு பெட்டி அல்லது கைப்பெட்டி என்று சொல்லலாம்.
தட்டச்சுப் பொறியில் விசைப்பலகையில் மேல் வரிசையில் உள்ள எழுத்துருக்களை upper case என்றும் கீழ் வரிசையில் உள்ளவற்றை lower case என்றும் குறிப்பிடுவர். இவற்றை முறையே மேலுரு என்றும் கீழுரு என்றும் சொல்லலாம். மேலும்,
in any case – எவ்வாறாயினும்
in case – என்ற நிலை ஏற்படுமானால், ஒருவேளை, எனில்
in that case – அந்நோ்வில்
make out a good case – சிறந்த காரணங்கள் அளி
என இடத்திற்கேற்றவாறு பொருள் கொள்ள வேண்டும்.
சாமீனில்(‘ஜாமீனில்’) விடுவிக்கப்பட்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. Bail – பிணை என்பதை அறிவீர்கள் அல்லவா? பிணையில் விடுவிக்கப்பட்டார் என்றே குறிக்க வேண்டும். பிணையில் விடுவிக்கப்பட்டவர் bailor – பிணையர் என்றும் அவ்வாறு அவருக்குப் பிணை தருபவர் bailee – பிணைதருநர் என்றும் குறிக்கப் பெற வேண்டும். பிணை தருவது தொடர்பான பணிகளைப் பார்ப்பவர் bailiff – என்பவரையே அமீனா என்கிறார்கள். பிணைப்பணியாளர் அல்லது பிணை ஊழியர் என்று சொல்ல வேண்டும். சுருக்கமாகப் பிணைப்பணியர் > பிணையர் எனலாம். இவ்வாறு பிணையில் விடத்தக்கவாறு அமைந்த குற்றத்தை
Bailable offence பிணை விடு குற்றம் என்றும் பிணையில் விட இயலா நிலையிலான குற்றத்தை non-bailable offence – பிணைவிடாக் குற்றம் என்றும் கூற வேண்டும்.
Bailable Warrant – பிணைவிடு பிடியாணை
Warrant – பணிமுறை அதிகாரப் பத்திரம், (கைது) ஆணைப் பத்திரம் என்கின்றனர். பிணையுறுதி, பற்றாணை, பொறுப்புறுதி, சான்றாணை எனவும் கூறுகின்றனர். ஒரே சொல்லையே பயன்படுத்த வேண்டும். எனவே, பிடியாணை என்பதையே பயன்படுத்தலாம்.
பற்றுச் சீட்டு எனவும் பொருளுண்டு. பற்றுச்சீட்டு என்பது பணம் பெறுகைச் சீட்டு என்றும் பணம் கொடுப்புச் சீட்டு என்றும் பொருளாகும்.. முன்பு வரிக்கான ஒப்புகைக் சீட்டு எனில் அடைச்சீட்டு பிற பண ஒப்புகைக்கு ஒடுக்குச்சீட்டு என்றும் பயன்படுத்தியுள்ளனர். நாம் இவற்றை மீள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம். இவற்றில் ஒடுக்கு என்பதற்கு மறைவிடம் என்றும் பொருள். எனவே, குளியலறை, கழிவறைகளுக்குத் தரும் பணச்சீட்டை ஒடுக்குச் சீட்டு எனலாம். ஆனால் அவ்வாறு பணச்சீட்டு எதுவும் தருவதில்லை. வில்லையை மட்டுமே தந்து திரும்பப் பெற்றுக் கொள்கின்றனர். எனினும் அவ்வாறு பணச்சீட்டுதரும் இடங்களில் ஒடுக்குச்சீட்டு என்பதைப் பயன்படுத்தலாம்.

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 15 : insolvent, adolescent, juvenile, minor, post-mortem – தமிழில்: இலக்குவனார் திருவள்ளுவன்



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : தொடர்ச்சி)

திவாலானவர் என இக்கோப்பில் குறிக்கப் பெற்றுள்ளது. திவால் தமிழ்ச் சொல்லல்ல.

insolvency – என்பது கடனைத் திருப்பச் செலுத்த இயலாமல் நொடித்துப் போன நிலையைக் குறிப்பதுநொடிப்பு என்று சொல்லலாம்இந்த நிலைக்கு ஆளானவர்   insolvent – நொடித்தவர்  எனலாம். இதற்கு நொடித்துப்போன என்றும் பொருளுண்டு. எனினும் பொதுவாக நாம்  நொடித்துப் போனவர் > நொடித்தவர் என்றே சொல்வோம்.

இதில் மைனர்  எனத் தமிழிலேயே குறிக்கப்பட்டுள்ளதுஅகவைக்கு  வராதவர்களைக் குறிக்கும்  minor இளம்படியர்  எனவும் அகவை வந்தவரைக் குறிப்பிடும்  major  பெரும்படியர் எனவும் கூறப்படுவர்.

இளவர், அகவை வராத,வயது வராத, சிறிய,உரிமை வயது எய்தாதவர், உரிமை வயது அடையாதவர் என்று பொருள்கள். கணக்கில் சிறிய, சிறு பகுதி என்றும் புள்ளியியலில் சிற்றணி என்றும் பொருள்கள்.

வழக்குகளில் மைனர் என்று வந்தால் என்ன சொல்ல வேண்டும்?

வழக்குகளைப் பொருத்த வரை  இவை முறையே சிறு வழக்குபெரு வழக்கு எனப்படும்.

 மைனர் என்றால் adolescent, juvenile  என்று சொல்கிறார்களே?

adolescent என்பது வளரிளம்பருவத்தினரையும்  juvenile என்பது இளஞ்சிறாரையும் குறிக்கும்.

adolescent என்றால் வளர்நிலைச் சிறார்>வளர்சிறார் எனலாம். வளர்சிறார் என்றால் எல்லாருமே வளருபவர்தாமே என்று சொல்லக்கூடாது. சொற்களை வரையறைப்படுத்தி வகைப்டுத்திக் கொள்ள வேண்டும். Adolescent-விடலை என்றும் கூறுகின்றனர். விடலைப்பருவம் என்பது பதினாறு முதல் முப்பது ஆண்டுவரையுள்ள பருவத்தைக் குறிப்பது. எனவே, adolescent என்பதற்கு விடலை பொருந்தாது.

 இளஞ்சிறார் என்பதை ஏற்றுக் கொள்வார்களா?

          நான் இளஞ்சிறார் நடுவர் மன்றத்தில்(Juvenile Court) நன்னடத்தை அதிகாரியாகப் பணியேற்ற உடன் இளஞ்சிறார் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். அப்பொழுது ஒரு சாரார்  சிறுவர் என்றே சொல்லலாம் என்றார்கள். சிறுவர் என்பது பொதுவான சொல்லாகும்: சிறுவர்  என்பதன் பன்மை வடிவம் சிறார். அவரிலும் சிறு பருவத்தினரைக் குறிக்கும் வகையில் இளஞ்சிறார் என்பது சரிதான் என்று கூறிப் பயன்படுத்தி வந்தேன். அதனையே நீதிமன்றத்திலும் பின்னர் காவல் நிலையங்களிலும் பிற அலுவலகங்களிலும் ஏற்று இன்று தொலைக்காட்சி முதலான தகவல் ஊடகங்களிலும் இளஞ்சிறார் என்றே குறிப்பிடுகின்றனர். எனவே பயன்படுத்தப் பயன்படுத்த எச் சொல்லும் எளிமையானதுதான்.

          ? juvenile என்று சொல்லின் பொருளை இச்சொல் குறிக்காது. அப்படியே பயன்படுத்தினால் என்ன?

          ? நாமாகவே இவ்வாறு கற்பனையில் ஏதோ ஒரு பொருளை நினைத்துக் கொண்டு இவ்வாறு கருதுகிறோம். உண்மையில் தமிழில் ஆடவருக்குக் குழந்தை, காளை, குமரன், ஆடவன், மூத்தோன், மூதாளன் என 6 பருவங்களும் பெண்டிருக்குப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண் என 7   பருவங்களும் குறிக்கப் படுகின்றன. இத்தகைய பருவ வரையறையும் சொல்லாட்சியும் வேறு எந்த மொழியிலும் இல்லை. இதனைப் புரிந்து கொள்ளாமையால், தமிழில்  உள்ள பருவங்களை நாம் மறந்து  இவ்வாறு பிறமொழிக்கேற்ப சொல்லாட்சியைப் பயன்படுத்துவதில் இடர்ப்படுகிறோம்.

          post-mortem  – பிரேத விசாரணை என வந்துள்ளது.பிரேதம் என்பது தமிழ்ச் சொல்லன்று. பிணம் என்றே சொல்லலாம். சடலம் என்பது உடலைக் குறிக்கும். உடற்கூறு ஆய்வு என்பதால் உயிரற்ற உடல் என்ற பொருளில் சடலம் என்றே குறிக்கலாம்.

post-mortem report – இறப்பு விசாரணை என்று சொல்லலாமா?

அப்படிச் சொன்னால், எவ்வாறு இறந்தார் என்பது குறித்த புற உசாவலாக அமையும்.

 inquest எனப்படுவது   எவ்வாறு மரணம் நேர்ந்தது என்பது பற்றிய , உசாவுதலைக் குறிக்கும். அதுதான் இறப்பு விசாரணை, இறப்பு உசா. இங்கு இறந்த உடலை ஆய்வு செய்வதால் உடல ஆய்வு, பிண ஆய்வு  என்று சொல்ல வேண்டும்.

இப்பதிவேடு தமிழில் இருந்தாலும் minute book என ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பொழுது ஆட்சிச் சொல்லகராதியைப் பார்த்தாவது அடுத்தவரிடம் கேட்டாவது தமிழில் எழுத வேண்டும் என்ற முயற்சி உணர்வு நம்மிடம் இருக்க வேண்டும். நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் குறிப்பான  minute நிகழ்(வுப்) பதிவு எனப்படும். நிகழ் பதிவைக் குறிக்கும்  minute book-  நிகழ்ச்சிப்பதிவேடு – நிகழேடு என்று அழைக்கப்பட வேண்டும். நிகழ்ச்சி வரிசையைக் குறிக்கும் agenda  நிகழ் நிரல் ஆகும்.

minute என்றால் நிமிடம் என்றுதானே பொருள்?

நிமையம், நுட்பமான; நுண்ணிய,மீச்சிறு, நுட்பமான, மணித்துளி,

குறுங் கோணஅளவு எனப் பல பொருள்கள் உள்ளன. இவைபோல் நிகழ்ச்சிப் பதிவையும் குறிக்கிறது. ஒவ்வொரு      நிமைய நிகழ்வையும் விடாமல் குறிக்க வேண்டும் என்பதற்காக இங்ஙனம் கூறுகிறார்கள் எனக் கருதத் தோன்றும். ஆனால், காலத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை. சிறு குறிப்புகள் என்னும் பொருள் கொண்ட minuta scriptura என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச்சொல் உருவானது. கூட்டத்தின் குறிப்புகள் குறித்த ஆவணமே நிகழ் பதிவேடு.

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 14 : உம்மைத் தொடர்களில் ‘மற்றும்’ தேவையில்லை : இலக்குவனார் திருவள்ளுவன்

      16 October 2025      கரமுதல



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 13 : ஓர், ஈர்,அஃது, இஃது பயன்பாடு, அது,இது, எது, யாது அடுத்து வல்லினம் மிகாது : தொடர்ச்சி)

தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை எனக் குறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மற்றும் எனச் சேர்ப்பது தவறாகும். மற்றும் என்பதை நீக்கிப் பின்வருமாறு குறிப்பிட வேண்டும்.

தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறை

ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத் துறை

இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை

உணவு கூட்டுறவு அமைச்சர்

உள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை

* கால்நடைப் பேணுகை மீன்வளத்துறை

கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை

கைத்தறி, கைத்திறன், சவுளி, கைந்நூல் துறை

சவுளி என்பது தமிழ்ச்சொல்லே. (ஞ்)சவுளி என்ற உச்சரிப்பு பெற்றதும் நாம் பிற சொல்லாகக்கருதும் நிலை ஏற்பட்டது. கைந்நூல் என்பதைக் காதி அல்லது கதர் என்றே பெரும்பாலும் கூறுகின்றனர்.
பரம்பரையாக ஒரு குழித்தறியில் கையால் நெய்யப்பட்டுக் கையால் நூற்கப்பட்டு காதி நெய்யப்படுகிறது. காதி என்பது குழி என்னும் பொருள் கொண்ட இந்திச்சொல் khad என்பதில் இருந்து பிறந்தது. இந்தியில் கதர்(Khaddar) என்றும் அழைக்கப்படுகிறது.

“காதியின் ஒரே அளவுகோல் அது கையால் நூற்கப்பட்டு கையால் நெய்யப்பட்டிருப்பதுதான்” எனக் காந்தி யடிகளே கூறியுள்ளார். (மகாத்மா காந்தியின் படைப்புகள் தொகுப்பு, தொகுதி 28, 1925) ஆனால் ஓர் இசுலாமிய அம்மையார் காந்தியடிகளுக்குக் கையால் நூற்ற துணியை அன்பளிப்பாகத் தந்த பொழுது அதனைப் பெற்றுக் கொண்டு மதிப்பு மிக்கது என்ற பொருளில் குறிப்பிட்டார். நெசவுத் தொழில் தமிழ்நாட்டின்மிகப்பழமையான சிறப்பான தொழில். எனவே, காதி என்றோ கதர் என்றோ குறிப்பிடாமல் கைந்நூல் என்றே சொல்லுவோம்.

* சமூக நலம் சத்துணவுத் திட்டத்துறை

சுற்றுப்புறம் வனத்துறை

சுற்றுலா, பண்பாடு சமய அறநிலையத் துறை

செய்தி சுற்றுலாத் துறை

தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். (௲௨௱௬௰௧ – 1261)

என்னும் குறளில் திருவள்ளுவர் தலைவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின எனக் குறிப்பிடுகிறார். விரலே கணக்கிற்கு அடிப்படையாக உள்ளது.விரல், விரற்கடை என்பன கணக்கில் இடம் பெறும் அளவீடுகளாகவும் உள்ளன. என்பதும் விரலைத்தான் குறிப்பிடுகிறது. digital என்பதும் இலக்கம், இலக்கமுறை; சொடுக்கெண்;எண்மம்; எண்மமுறை; என்னும் பொருள்களில் பயன்படுகிறது. எனவே நாம் , Information Technology and Digital Services Department என்பதைத் தகவல் தொழில்நுட்பவியல் எண்மப் பணிகள் துறை எனச் சொல்ல வேண்டும்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு வணிகத் துறை

தொழிலாளர் வேலைவாய்ப்புத் துறை

நகராட்சி நிருவாகம் குடிநீர் வழங்கல் துறை

நிர்வாகம் என்பது தவறு என்பதால் நிருவாகம் எனக் குறிப்பிடுகிறேன்.

நெடுஞ்சாலைகள் சிறு துறைமுகங்கள் துறை

* பணியாளர் பணியாட்சிச் சீர்திருத்தத் துறை

இத்துறையின் பெயரை இப்போது மனிதவள மேலாண்மைத் துறை (Human resource management department) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையர் நலத்துறை

மக்கள் நல்வாழ்வு குடும்ப நலத்துறை

மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை

வணிகவரி பதிவுத்துறை

வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை

பொருளியல் புள்ளியல் இயக்கம்

பொருள் வழங்கல் நுகர்வோர் பாதுகாப்புத்துறை

மதிப்பீடு செயல்முறை ஆராய்ச்சித்துறை

மருத்துவம் ஊரகநலப்பணிகள் துறை

மருத்துவ மனைகள் மருத்துவக் கல்லூரிகள்

மிகப்பிற்பட்டோர் சீர்மரபினர் நலத்துறை

கலை பண்பாட்டுத் துறை

சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்று வாரியம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம்

தமிழ்நாடு தோட்டக்கலை மலைப்பயிர் துறை

கட்டுமான வடிவமைப்பு ஆராய்ச்சி

கட்டுமானம் பேணுகை

கட்டடப் பேணுகை கட்டுமான வட்டம்

என்பன போல்தான் குறிப்பிட வேண்டும்.

பராமரிப்பு எனக் குறிக்கப்படுவனவற்றைத்தான் நான் பேணுகை எனக் குறிப்பிடுகிறேன்.

மற்றும் எனக் குறிக்காமல் சுருக்கமாக (ம) என்றும் குறிக்கின்றனர். அதுவும் தவறு.

? “மற்றும்’ என்பது தமிழ்ச்சொல்தானே? பயன்படுத்தினால் என்ன தவறு?

விடை: “மற்றும்’ என்பது மேலும், மீண்டும் ஆகிய பொருள்களைத் தரும்

தமிழ்ச்சொல்.  இதனை “உம்’ (and) என்பற்கு மற்றாகப் பயன்படுத்தக் கூடாது. மேலும்.

மற்ற.  பிற.

மற்றது.  ஏனையது.

மற்றநாள்.  மறுநாள், நாளை, மறுநாள்

மற்றபடி.  வேறுவகையில்.

மற்றவர்.  பிறர், ஏனையோர்

மற்று.  மறுபடியும், ஓர் அசைநிலை

மற்றையது.  குறித்த பொருளுக்கு இனமான வேறு ஒன்று

மற்றொன்று.  பிறிதொன்று.

என்பன போல் பொருள் உள்ளனவே தவிர “உம்’ பொருள்பட எச்சொல்லும் இல்லை. மேலும் “உம்’ வரக்கூடிய இடங்களில் சான்றாக அலுவலரும் ஆசிரியரும் என்பது போல் குறிக்க வேண்டிய இடங்களில் ஆசிரியர் அலுவலர் என “உம்’ பயன்படுத்தாமல் குறிப்பதே மரபு. இது போன்ற இடங்களில் “உம்’ தொக்கி (வெளிப்படாது மறைந்து) நிற்பதால் உம்மைத் தொகை என்கிறோம். நாம் இரவு பகல், ஆடு மாடு, இயல் இசை  நாடகம், சேர சோழ பாண்டியர் என்று கூறுவோமே தவிர இரவு மற்றும் பகல் ஆடு மற்றும் மாடு, இயல் மற்றும் இசை மற்றும் நாடகம், சேரர் மற்றும் சோழர் மற்றும் பாண்டியன் எனக் கூறுவதில்லை.

அல்லது

இரவும் பகலும்

ஆடும் மாடும்

இயலும் இசையும் நாடகமும்

சேரரும் சோழரும் பாண்டியரும்

எனலாம்.

இவ்வாறு சேர சோழ பாண்டியர், இரவு பகல் என உம்மைத்தொகை வரும் பொழுது வல்லினம் மிகாது.

உம்மைத் தொகை தவிர, போன்ற, முதலிய ஆகிய என்னும் சொற்களையும் பலரும் சரியாகக் கையாள்வதில்லை.

கேள்வி: இவற்றில் என்ன வேறுபாடு உள்ளது? ஒன்று போல்தானே பயன்படுத்துகிறோம்?

விடை: பொருள் வேறுபாடின்றி அவ்வாறு பயன்படுத்துவது தவறு.

ஒன்றை அல்லது ஒருவரை மட்டும் எடுத்துக்காட்டாகக் கூறி அதனை அல்லது அவரைப் போல என விளக்கும் இடங்களில் “போன்ற’ எனக் குறிப்பிட வேண்டும்.

சான்றாக,

மதுரை போன்ற ஆற்றுப்பாசன ஊர்களில் எனக் குறிப்பிடின், ஆறுகள் பாய்ந்து நீர்ப்பாசனத்திற்கு உதவும் பல ஊர்களில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு, இதுபோன்ற பல ஊர்கள் உள்ளமையை உணர்த்துகிறோம்.

“முதலிய’ என்பது மேலும் தொடர்ச்சியாக வேறு உள்ளனவற்றையும் குறிப்பிடுகின்றது.

ஆதிதிராவிடர் நலத்துறை கலை பண்பாட்டுத்துறை முதலிய துறைகளில் தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் சிறப்பாக உள்ளது என்றால் இவ்வாறு இருக்கக் கூடிய துறைகளில் இரண்டு துறைகளை மட்டும் சுட்டிக் காட்டியுள்ளதாகப் பொருள்.

அதே நேரம் “ஆகிய’ என்பது முற்றாக அமைந்து விடுகிறது.

மதுரை, சேலம், சென்னை ஆகிய நகரங்கள் என்றால் இம்மூன்று ஊர்களை மட்டும்தான் குறிக்கின்றோம். இவற்றைப் போன்று (இந் நேர்வில்) மேலும் ஊர்கள் உள்ளனவாகப் பொருள் இல்லை. தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றோம்.

அல்லது சேர, சோழர், பாண்டியர் ஆகியோர் எனக்குறிக்க வேண்டும்.

உயர்திணையாய் இருப்பின் பாவலர் முதலியோர் என்பது போல் முதலியோர் எனக் குறிக்க வேண்டும்.

எனவே “மற்றும்’ என்ற சொல்லைத் தவிர்த்து இடத்திற்கேற்ற போல்

உம்மைத் தொகை

உம்மை விரி

போன்ற, போன்றன, போன்றவை, போன்றோர்

முதலிய, முதலியன, முதலியவை, முதலியோர்

ஆகிய, ஆகியன, ஆகியவை, ஆகியோர்

என இடத்திற்கேற்ற இணைப்புச் சொற்களைக் கையாள வேண்டும். இவற்றிற்கு முரணாக “மதுரை ஆகிய மாவட்டங்களில்’ “இயல் இசை நாடகம் முதலிய 3 துறைகளில்’ “சேர, சோழ, பாண்டியர் போன்ற மூவேந்தர்கள்’ எனக் குறிப்பிடுவது தவறாகும்.