08 May 2026
(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! 24 இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1 தொடர்ச்சி)
கொல்லும் சொல் : ‘மாடல்’
தி.மு.க.தலைவருக்கு ஆங்கில மோகம் உள்ளது அனைவரும் அறிந்ததே! “எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!” எனப் பேசி வந்தாலும் ஆங்கிலச்சொல் அறிமுகமானால் அதைத்தான் பயன்படுத்துபவர். விளம்பரங்களிலும் புதிய திட்ட முழக்கங்களிலும் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுவதும் அறிந்ததே. நாம் இதனைப் பன்முறை சுட்டிக்காட்டியுள்ளோம். சிலவற்றைக் கேட்டுக் கொண்டாலும் திராவிட மாடல் பெயர்ப் பற்று அவரை விட்டுப் போகவில்லை.
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. (திருவள்ளுவர்,திருக்குறள், ௪௱ – 400)
என்கிறார் திருவள்ளுவர்.
கல்விதான் கேடு தராத சிறந்த செல்வம். மற்றவை சிறப்பான செல்வம் ஆகா என்கிறார். ‘மாடு’ என்றால் சிறப்பு, பெருமை, பீடு(=பெருமிதம்) எனப் பொருள்கள். ‘மாடல்ல’ என்றால் சிறப்பல்ல, பெருமையல்ல எனப் பொருள்கள்.
“மாடல்(model) என்னும் ஆங்கிலச்சொல்லை அதற்குத் தமிழ்ச்சொல்லே இல்லாத மாதிரி அவ்வாறே பயன்படுத்துவது ஏன்?” எனப் பலரும் கேட்டாலும் செவி சாய்ப்பதில்லை. மதுரை உயர்நீதிமன்றக்கிளையிலும் நீதிபதிகள் “திராவிட மாடல் என்பதில் ஆங்கிலத்திற்கு மாற்றாக முற்றிலும் தமிழிலேயே பயன்படுத்தலாமே! …ஏன் ஆங்கிலச்சொல்லையே பயன்படுத்துகிறார்கள்” என்று கேட்டும்(24.04.2023) கேளாச் செவியாக இருந்து விட்டார்கள். நாமும்(30.05.2022) முன்பு திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே!” என அகரமுதல இதழில் இதழுரையில் வினா எழுப்பியிருந்தோம். மக்கள் சார்பாளர்கள் மூலம் அவர் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். இவ்வாறு பலர் கூறினாலும் எழுதினாலும் காதுகளையும் கண்களையும் இறுக மூடிக்கொண்டு, தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்று இருந்துவிட்டார்.
Model – மாதிரி என்று சொல்லலாம். அல்லது இதன் அடிப்படையில் திராவிட மாதிரியம் எனலாம். மாதிரி தமிழல்ல என எண்ணித் தவிர்த்திருக்கலாம். அதற்கு வேறு தமிழ்ச்சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர ஆங்கிலச் சொல்லை யல்ல. எனினும், மாதிரி என்பதும் தமிழ்ச்சொல்தான். அல்லது முன்முறை என்றாவது நன்முறை என்றாவது பயன்படுத்தலாம்.
1957 இல் மதுரைத் தெப்பக்குளம் எதிரில், தியாகராசர் நன்முறை உயர்நிலைப் பள்ளி(THIAGARAJAR MODEL HIGH SCHOOL) என நன்முறை என்னும் நற்றமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தியிருக்கையில், அதுவும் நன்றாக மக்கள் உள்ளங்களில் பதிந்திருக்கையில் நாம் அச்சொல்லையே பயன்படுத்தி திராவிட நன்முறை என்று சொல்லாமே எனக் குறிப்பிட்டிருந்தோம்.
நம் மொழி தமிழ், நம் இனம் தமிழ், நம் நாடு தமிழ்நாடு. எனினும் பகுத்தறிவு, பெண்ணுரிமை, சீர்திருத்தம், சாதி ஒழிப்பு, தன் மதிப்பு, குமுக நீதி முதலான மறுமலர்ச்சிப் பணிகள் என்பவற்றின் குறியீடாகத் திராவிடம் பயன்படுத்தப்படுகிறது; எனவே, ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் ‘சிறப்பில்லாத’ என்னும் பொருளைத் தமிழில் தரும் ‘மாடல்’ என்பதை ஆங்கில ஒலிபெயர்ப்பாகக் கூறுவது முறையல்ல அல்லவா? அதனை எப்படி ஏற்க இயலும்?
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருக்குறள், ௬௱௪௰௫ – 645)
என்கிறார் திருவள்ளுவர். ஆனால் வேறு கொல்லும் சொல் இல்லை என்பதறிந்து கொல்லும் சொல்லைப் பயன்படுத்தினால் எங்ஙனம் வெல்ல இயலும்? “ஒரு சொல் வெல்லும்! ஒரு சொல் கொல்லும்!” என்னும் நாட்டார் மொழி பட்டறிவில் உருவானதுதானே! அப்படியான கொல்லும் சொல்தானே ‘மாடல்’.
“சொல்லில் என்ன இருக்கிறது” என்று எண்ணக்கூடாது? இதனை மூடநம்பிக்கையாகவும் கருதக் கூடாது. தமிழ்த்தென்றல் திருவிக முதலானவர்கள் சொல்லுக்கு மந்திர வலிமை உண்டு எனக் கூறியுள்ளனர்.
“குழந்தைகளுக்குத் தொடக்கத்திலேயே தமிழை அறிமுகப் படுத்துங்கள் எனக் கலைஞர் மு.கருணாநிதி அறிவுறுத்தியது எக்காலமும் நாம் பின்பற்ற வேண்டிய பொன்மொழியாகும். கலைஞரின் வழியினும் சிறப்பான வழியில் நடைபோடும் அவர் மைந்தனின் ஆட்சியில் அவரது பொன்மொழியைப் புறக்கணிக்கலாமா? எனவே, முதல்வர் மு.க.தாலின் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள். திராவிடமாடல் என்பதில் உள்ள ‘மாடல்’ என்னும் சொல்லைத் தூக்கி எறியுங்கள். பிறருக்கு முன்மாதிரியாக இருப்பதைக் குறிப்பிட எண்ணினால் திராவிட முன்முறை எனக் கூறுங்கள். எப்பொழுதும் நிலையான நல்லாட்சி என்று தெரிவிக்க விரும்பினால் திராவிட நன்முறை எனக் கூறுங்கள்.” என்று முன்பு கூறியதையே இப்போதும் தெரிவிக்கிறோம்.
44th Fide Chess Olympiad 2022 chennai , ‘போலீசு அக்கா’, ‘நம்ம school’ / Namma School Foundation, நம்ம ஸ்கூல், “நம்ம CHENNAI”, நிகழ்ச்சிக் கல்வெட்டுகளில் ஆங்கிலம், மேடைப் பதாகைகளில் ஆங்கிலம் என எங்கும் எதிலும் ஆங்கிலப் பயன்பாட்டைக் கண்டவர்கள்தானே நாம். எனவேதான், எண்ணுவோம் தமிழில் எழுதுவோம் தமிழில் என்பதைப் பின்பற்றவில்லை. தலைவர் எவ்வழி அவ்வழியே பிறரும்.
இவற்றையெல்லாம் ஆட்சி போனபின்பு சொல்வதாக எண்ணக்கூடாது.
அவரது தோல்வியால் பிறகட்சியினரும் தமிழ் நாட்டிற்கு அப்பாலும் -வெளிநாட்டினரும், பிற கட்சியினரும் வருத்தமுற்றுள்ளனர். இதற்குக் காரணம் ஓயாமல் சிறப்பில்லாத அரசு, பெருமையில்லாத அரசு என்று எங்கும் ஒலித்துக்கொண்டு இருந்ததுதான். என்பதைச் சுட்டிக்காட்டவே. எனவே, அடுத்து ஆட்சி வரும் வரை காத்திருக்க வேண்டா. கட்சித் தலைவர் என்ற முறையில் பிறருக்கு முன்மாதிரியாக இருந்து தமிழையே பயன்படுத்துக! ஆட்சியில் மீள அமரும் பொழுது எவ்வாறெல்லாம் கொல்லும் சொல்லை அகற்றி வெல்லும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து இப்பொழுதே திட்டமிடுங்கள்.
உங்கள் நா தமிழே பேசுக! நீங்கள் கையிலேந்தும் இறகு தமிழே எழுதுக! உங்களுடைய இருதயம் தமிழையே நாடுக! உங்களையெல்லாம் தமிழ் மாது தயையுடன் இரட்சித்திடுக!
– தனித்தமிழ் ஆர்வலர், இதழாளர், விடுதலைப் போராளி சுப்பிரமணிய சிவா(ஞானபாநு, செப்டம்பர், 1915)
தமிழில் எழுதுக! தமிழில் பேசுக!
தமிழில் பெயரிடுக! தமிழில் பயில்க!
– தமிழ்ப்போராளி பேரா.முனைவர் சி.இலக்குவனார்
தமிழ் பேசுகையில் தமிழிலேயே பேசுக!
தமிழ் எழுதுகையில் தமிழிலேயே எழுதுக!
இந்தியாவின் திசைகாட்டி மு.க.தாலின் தமிழ் வழிச்சிந்தனைக்கு நன்முறையாக இருந்து வழிகாட்டுவாராக!
– இலக்குவனார் திருவள்ளுவன்