(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு தொடர்ச்சி)

கோப்புகளில் உள்ளவற்றைப் பார்ப்பதற்குச் சிறிது இடைவெளிவிட்டு இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் குறித்துப் பார்ப்போம்.

தமிழைக் கொலை செய்வதில் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. தமிழ் ஆர்வம் மிக்க ஊடகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாகக் கொலைகாரர்களே உள்ளனர். இவர்களுக்கெல்லாம் கடுந்தண்டனை விதித்தால்தான் தமிழ் வாழும். எனவே, இனியாவது ஊடகத்தினர்  கொலைகாரர்களாக இல்லாமல் தமிழை வாழ வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

இதைப் படிப்பவர்களாவது உணர்வு பெற்று ஊடகத்தினரைத் திருத்துவார்களாக!

இப்பொழுது நாம் இதழ்களில் இடம் பெறும் பிழை மலிந்த செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 கட்டுரைகளிலும் செய்திகளிலும் இலக்கிய வரிகளை மேற்கோளாகக் காட்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவற்றில் பிழைகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சான்றுக்கு ஒன்று.

“பாரதிதாசனின் “கண்ணீரின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம்” என்ற கருத்தை ஒட்டியே தான் இதை எழுதியதாக விளக்கம் கொடுத்தேன்” என்கிறார் செய்தி எழுத்தாளர். ஆனால்,

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்”

என்பதுதான் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள நயம் மிகுந்த வரிகள். கண்ணைக் கண்ணீராகக் காட்டிவிட்டார் செய்தி எழுத்தாளர். இதைப் பாடலாசிரியர் தவறாகச் சொன்னாரா? அல்லது செய்தியாளர் தவறாக எழுதிவிட்டாரா என்று தெரியவில்லை. எனினும் அச்சில் வரும்பொழுது சரியாக வருவதில் கருத்து செலுத்த வேண்டாவா?

“இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.”  என்றொரு செய்தி.

டிரெண்டு என்பதைத் தமிழிலேயே குறிக்கலாமே!

 trend என்பதற்குப் போக்கு, நாட்டம், பாங்கு, பான்மை எனப் பொருள்கள். எனினும் பெருமளவு வரவேற்பைப் பெற்றுப் பரவலாவதால் “இக்காணுரை இப்போது பரவலாகி வருகிறது” எனலாம்.

பலரும் தமிழ்ச்சொற்களை அறிந்திருந்தும் ஒலிபெயர்ப்புச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

சான்று சில:

“சார்கோல் மூலம் இயங்கும் இசுத்திரி பெட்டிகளையே நம்பியிருக்கிறார்கள்.”

அடுப்புக் கரியை அறியாதவரா செய்தியாளர்? ‘சார்கோல்’ என ஒலிபெயர்ப்பில் குறிப்பிட்டதற்குக் ‘கரி’ என்றே குறிக்கலாமே!

சாமீன் நிபந்தனையாக பாசுபோர்ட் முடக்க முடியாது’… அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; ஐகோர்ட்

என்பது மற்றொரு செய்தி.

(ஞ்)சாமீன் என்னும் பாரசீகச் சொல்லின் முதன்மைப் பொருள் பிணை என்பதாகும்.

பிணை, பிணையம், பிணையாளி, பிணைக்கைதி முதலான பொருள்களில் இடத்திற்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றது. உத்தரவாதம், முன்பேறு, சான்று, சான்றாவணம், சான்றிதழ், நற்சான்று, சான்றுரை முதலாய பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பிணை என்னும் நல்ல தமிழ்ச்சொல் இருக்க சாமீன் என்னும் அயற்சொல் எதற்கு? கடவுச்சீட்டு என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகையில் பலரறிந்த தமிழ்ச்சொல்லைப் புறக்கணிப்பது ஏன்? உயர்நீதிமன்றம்தான் தமிழைப் புறக்கணிக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் என்று தமிழில் குறிக்கத் தயக்கம் ஏன்? “கடவுச்சீட்டை நிபந்தனையாக முடக்க முடியாது.  … அதிகாரிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. – உயர்நீதிமன்றம்”  எனக் குறிக்கலாமே!

“ஆராகி கையெழுத்திடும் நிபந்தனை”  என்று ஒரு செய்தி.

 ஃகாசிர்(Hazir) என்பது அரபு மொழியில் இருந்து உருது, இந்தி, துருக்கி மொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதுவே ஆசர் ஆனது. ஆயத்தமாக, கிடைக்கக்கூடிய, பணியில் இருத்தல், தோற்றம், வருகை புரிதல், ஒருவர் அல்லது ஒரு குழுமுன் தோன்றுதல், முன் நிற்றல், நேர் நிற்றல் என இடத்திற்கேற்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, வருகை புரிந்து கையெழுத்திடும் நிபந்தனை எனக் குறிக்கலாம்.

இந்தக் கிழவனை தலையணை வைத்துக் கொள்ளுங்கள்” என்றும்

சிலிண்டரை பற்ற வைத்து இந்தக் கிழவனைக் கொள்ளுங்கள்” என்றும் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வைத்துக் கொள்ளுதல், எடுத்துக் கொள்ளுதல் என்பன போன்று பொருள் வரும் வகையில் தலையணை வைத்துக் கொள்ளுங்கள் என்பது சரிதானா? உயிரைப் பறித்தல் என்னும் பொருளில் உயிரை எடுக்கும் கொல்லுதலைக் கொள்ளுதல் என்பது சரியாகுமா? இதனைத் தவறாக இடம் பெற்ற எழுத்துப் பிழையாகக் கருதுவதா? அல்லது பொருள் புரியாமல் பயன்படுத்தும் சொற்பிழையாகக் கருதுவதா?

இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லினம் மிக வேண்டுமல்லவா? அப்படியானால் சிலிண்டரைப் பற்ற வைத்து என்றுதானே குறித்திருக்க வேண்டும்.

சிலிண்டர் என்பது gas cylinder என்பதன் சுருக்கம். gasoline cylinder என்றும் gas bottle என்றும் குறிப்பர். gas என்பது காற்றை அல்லது வளியைக் குறித்தாலும் இங்கே எரிவதற்குப்பயன்படுத்தப்படும் வாயுவையே குறிப்பிடுகிறது. அங்கிங்கு எனாதபடி எங்கும் வாய்த்துள்ள காற்றை வாயு என்பதும் தமிழே. எனவே, எரி வாயு, அதனால் எரிவாயு உருளை எனலாம். உருளையைப் பற்ற வைப்பது என்றால், உருளையைப் பற்ற வைப்பது அல்ல. உருளையில் உள்ள எரிவாயுவையே. எனவே, செய்தியில் எரிவாயுவைப் பற்ற வைத்து எனலாம்.

“தி.மு.க-வுக்கு கூடுதல் இடங்கள்: தந்தி டி.வி சர்வே ரிசல்ட்”

 என வந்துள்ளது.

சர்வே ரிசல்ட் என்பது இந்த இடத்தில் ஆய்வு முடிவைக் குறிக்கிறது. எனவே,

தந்தித் தொலைக்காட்சி ஆய்வு முடிவு எனலாம்.

 நான்காம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லெழுத்து மிகும் என்பது குறித்து முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். ‘தி.மு.க.வுக்குக் கூடுதல்’ என வர வேண்டும்.

“நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்… சென்னையில் இருந்து சிறப்பு ரயில்; டிக்கெட் போட செக் பண்ணுங்க”

என்பது ஒரு செய்தி.

ஊர்ப்பெயர்கள் பண்புத்தொகையாக வரும்பொழுது அடுத்து வரும்சொல் க,ச,த,ப என வல்லெழுத்தில் தொடங்கினால் வல்லெழுத்து மிகும். எனவே நெல்லைக்கு அடுத்து வல்லெழுத்து மிகுந்து

நெல்லைப்பயணிகள் என்று வர வேண்டும்.

செய்தியாளர்களுக்கு (குட்) நியூஸ் என்ற சொல்லுக்கான தமிழ்கூடத் தெரியாமல் இருந்தால் அது வெட்கக்கேடு அல்லவா?

இரயில் என்பது தண்டவாளத்தைத்தான் குறிக்கிறது.எனினும் பழக்கத்தில் தண்டவாளத்தில் செல்லும் தொடர் வண்டியைக் குறிக்கிறது. இதனைச் சுருக்கமாகத் தொடரி எனலாம்.

நெல்லைப்  பயணிகளுக்கு நல்ல செய்தி (அல்லது நற்செய்தி).      சென்னையில் இருந்து சிறப்புத்  தொடரி”  எனக் குறிப்பதே சிறப்பாகும்.

ticket என்றால் பொதுவான பொருள் சீட்டு, எனினும் இடத்திற்கேற்ப இரு சொல்லாக அமைந்து பயணச் சீட்டு, இசைவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு, குலுக்கல் சீட்டு என்பனபோல் குறிக்கப்பெறும். இங்கே பயணச்சீட்டைக் குறிக்கின்றது.  தொடரியில் இடம் கிடைக்கிறதா இல்லையா எனச் சரிபார்க்குமாறு செய்தி தெரிவிக்கிறது. எனவே, பயணச்சீட்டு கிடைக்கிறதா எனச் சரிபாருங்கள் எனலாம். அல்லதுஇன்னும் சுருக்கமாகப் “பயணச்சீட்டு கிட்டுமா எனப் பாருங்கள்”  எனலாம்.