Showing posts with label எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!. Show all posts
Showing posts with label எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்!. Show all posts

Jun 10, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: இலக்குவனார் திருவள்ளுவன்

      10 June 2026      



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: தொடர்ச்சி)

இலக்கணக் குறிப்புகளையும் சொல்லாக்கங்களையும் தெரிவிக்கும் பாதையில் இனிச் செல்லலாம் என எண்ணினேன். ஆனால், நாளும் படிக்கின்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது உள்ளம் நாளும் வேதனை யுறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் தமிழே இல்லாத நிலை விரைவில் வந்து விடும் என்று கவலையாக உள்ளது. ஆங்கிலவழிச் சிந்தனையாலும் ஆங்கிலவழியாகத் தமிழ்த் தட்டச்சை மேற்கொள்வதாலும் வரும் பிழைகளும் மண்டியுள்ளன. எழுதுபர்கள்தாம் கவனக் குறைவாலும் அறியாமையாலும் தவறாக எழுதுகிறார்கள என்றால் அவர்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்கள் அவற்றைப் பார்த்துத் திருத்த மாட்டார்களா? அல்லது செய்தி வந்தபின்னராவது படித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்தமாட்டார்களா? இக் கொடுமைகளுக்கு எப்படித்தான் முற்றுப்புள்ளி இடுவது. ஊடகக்கொலைகளையே பார்த்தால் நாளும் நூற்றுக்கணக்கில் குறிப்பிட வேண்டும். எனவே, இந்தக் கட்டுரையுடன் இதற்கு நாமாவது முற்றுப்புள்ளி யிடலாம் என எண்ணுகிறேன்.

இப்போது நாம் மின்னிதழ்களில் காணும் சில கொலைச்செய்திகளைப் பார்ப்போம்.

“ஆனால், தற்போது வெளியாகியுள்ள சங்கீதா ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்பிரல் 20ஆம் நாள் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று இருக்க வேண்டும். ஆனால், “தற்போது வெளியாகியுள்ள சங்கீதா” என்றால் என்ன பொருள்? சங்கீதா என்பது திரைப்படத்தின் பெயரா? பாடற்தொகுப்பின் பெயரா? “இப்போது வெளியாகியுள்ள சங்கீதாவின் அறிக்கையில்” என்பதுபோன்று வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

“சரிதாவைப் பொறுத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ அல்லது அவரது மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய ஒரு நடிகரோ அல்ல”

ஓ காரம்’ வந்தால் ‘அல்லது’ இடையில் தேவையில்லை. சரிதாவைக் குறிப்பிட்டு விட்டு அவரது மனைவியாக என்று குறிப்பிட்டால் சரிதாவின் மனைவியாக என்றல்லவா பொருள் வருகிறது. “சரிதாவைப்பொருத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ என் மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய நடிகரோ அல்லன்” என்று இருக்க வேண்டும்.

“இரட்டை இலை சின்னத்துடன் செக் மாதிரிகளை கைப்பற்றிய தேர்தல் ஆணையம்”

“இரட்டை இலைச் சின்னத்துடன் உள்ள காசோலை மாதிரிகளைக் கைப்பற்றிய தேர்தல் ஆணையம்”  என எழுதியிருக்கலாமே.

“மோடி கவர்மெண்ட் ஒரு ஃபெயிலியரை சந்திக்கும், டிபீட் ஆகும் இந்தப் பில்லுன்னு நினைச்சீங்களா?”

மோடி அரசு ஒரு குலைவைச் சந்திக்கும். இந்த வரைவம் தோல்வியுறும் என நினைத்தீர்களா? என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

bill என்றால் மசோதா என்கிறோம். தமிழில் சட்டவரைவு > வரைவம் என்பதே சரியாகும்.

“ஒரு பைனல் வார்னிங் அப்படின்னு சொன்னீங்க.”

(ஓர்) இறுதி எச்சரிக்கை என்று சொன்னீர்கள்.

“எதுவா இருந்தாலும் மெஜாரிட்டி இருக்கும்ன்னு நிறைவேத்திருவாங்க. ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்காங்க.”

எதுவாக இருந்தாலும் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், முதல் தடவையாக ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் – என எழுதுவதே சரி.

“மோடியால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.”

மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது.

“டிலிமிட்டேன் விவகாரத்தில,  நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தோல்வி அடைந்த பதட்டத்தில அவர் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறார்.”

தொகுதி மறுவரையறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தோல்வி அடைந்த பதற்றத்தில் இவர் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் – இவ்வாறு எழுதுவதுதானே சரியாக இருக்கும்.

delimitation என்றால் வரையறை எனப் பொருள் என்றாலும் தொகுதி வரையறை என்ற பொருளிலேயே குறிக்கப்படுகின்றது. பதட்டம் என்பது தவறு. பதற்றம் என்றே குறிக்க வேண்டும்.

“திமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும் ….”

செய்தியைப் படித்ததுமே தவறு தெரிந்து விடுகிறது. அதிமுக கூட்டணியில் என்று இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற தவறுகளை நாளும் காணலாம்.

“ராஜ்யசபா எம்.பி”

மாநிலங்களவை உறுப்பினர் எனத் தமிழில் குறிப்பிடலாமே!

“மாஜி மந்திரிகள்”

முன்னாள் மந்திரிகள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் என்று குறிக்கலாமே!

“ஊட்டி, கொடைக்கானலுக்கு பாய் சொல்லிட்டு.. இந்த சம்மருக்கு பிளான் பண்ணவேண்டிய சூப்பரான மலைவாசஸ்தலங்கள்!”

பாய், படுக்கை என்று சொல்ல வேண்டுமா?

தலம் என்னும் தமிழ்ச்சொல்லுடன் ஸ் சேர்த்து ஸ்தலம் என ஆரியச் சொல்லாக்கி விட்டனர். எனினும் ஊட்டி, கொடைக்கானலுக்கு விடை கொடுத்துவிட்டு, இந்தக் கோடைக்குத் திட்டமிடவேண்டிய சிறப்பான மலைவாழிடங்கள் என்பதே சரியாகும்.

“தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணார்.”

மூணாறு, அடையாறு, பெரியாறு என்று குறிப்பிடாமல் மூணார், அடையார், பெரியார் என்றே தவறாக எழுதியும் பேசியும் வருகின்றோம். ஆறு எப்படி ஆர் ஆகும்.

தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணாறு என்று இருக்கவேண்டும்.

“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்தால் வரவில்லை.”

“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்ததால் வரவில்லை” என்று இருக்க வேண்டும்.

“மே நாலந்தேதி சன்டை போட்டுக்கலாம்.”

நாலாந்தேதி -நாலாம் நாள் என்றெல்லாம் குறிக்காமல் அஃதென்ன நாலந்தேதி. அதென்ன சன்டை? சண்டை என்று கூட எழுதத் தெரியாதா?

“தமிழீசையின் வாக்கு பலிக்குமா?”

தமிழிசையின் வாக்கு பலிக்குமா? என்றுகூட குறிக்கத் தெரியாதா?

“அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார்.”

இரு முறை பெயரைக் குறிப்பிட்டுச் செய்தியைக் குழப்புவானேன்?

எனது மகன், அவரது மகன் என்று சொல்லக் கூடாது.  மகன் உடைமைப் பொருளல்ல. எனக்கு மகன், அவருக்கு மகன் என்றுதான் வரவேண்டும். அவர் மகன் என்று சொன்னால் போதும்.

அவர் மகன் உதயநிதி தாலின், தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வென்றுள்ளார் எனலாமே!

“மாலை 6 மணி வரை நான் விஜய்யுடன் வீட்டில் தான் இருந்தார்.”

நான் எனத் தன்மையில் குறிப்பிட்டு விட்டு இருந்தார் எனப் படர்க்கையில் முடித்துள்ளது ஏன்?

மாலை 6 மணி வரை நான் விசய்யுடன் வீட்டில் தான் இருந்தேன் என்று வர வேண்டும். அல்லது மாலை 6 மணி வரை  விசய் வீட்டில் தான் இருந்தார் என வர வேண்டும்.

“இதன் காணமாகவே

 இதன் காரணமாகவே என்பதில் ‘ர’ எழுத்தைக் காணாமல் போக்கி விட்டார்கள்.  

 “என்னை வலுக்கட்டாயமாக கருவை செய்தார்.”

கருவை செய்தாரா?  கருக்கலைப்பு செய்தார் என்றுதானே இருக்க வேண்டும்.

  வலுக்கட்டாயமாக என் கருவைக் கலைத்தார் என்றல்லவா வர வேண்டும்.

“இதுதான் சிட்டிவேசன்”

situation என்பதையும் அறியாமல் தவறாமல் குறிப்பானேன்?

இதுதான் நிலைமை அலலது சூழ்நிலை என்று எளிதாகச் சொல்லலாமே!

“தமிழக அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்.

மாணவர்களுக்கு குட் நியூஸ்

நல்ல செய்தி அல்லது நற்செய்தி என்று கூட நல்ல தமிழில் எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் ஏன் எழுத்துப் பணிக்கு வருகிறார்கள். இது போன்ற செய்திகளைப் படிப்போர் கண்டித்தால்தான் இதழ் நிறுவனங்கள் நல்ல தமிழுக்கு முதன்மை தரும்.

“திருமணம் செய்து கொல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள்.”

யாரைத் திருமணம் செய்து யாரைக் கொல்ல வேண்டும் என விரும்பினார்கள்?

திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றுகூட எழுதத் தெரியாதா? ஆனால், நாம் முன்னேரே இது போன்ற தவறுகளைச் சுட்டிக் காட்டியிருந்தோம். அப்படித்தான் செய்தியாளர்கள் தவறாக எழுதுகிறார்கள்.

“நேற்று நலமிலா இந்த வரை திருமணம் செய்து கொண்டார்”

நேற்று நலமில்லாது இருந்தவரை இன்று திருமணம் செய்து கொண்டாரா?

அல்லது நலமில்லாது இருந்தவரை நேற்று  திருமணம் செய்து கொண்டாரா?

நேற்று, நவமி இலதா (Navami Latha) என்பவரைத் திருமணம் செய்து கொண்டாரா என்று எழுதியிருக்க வேண்டும். பெயரைக்கூடச் சரியாக அறிந்து குறிப்பிட மாட்டார்களா?

ஓரிதழில் வந்த செய்திகளைத்தான் குறிப்பிட்டுள்ளேன். அனைத்து இதழ்களின் செய்திகளையும் பார்த்தோம் என்றால் கணக்கிலடங்காத் தவறுகளைக் காணலாம்.

இவற்றை யெல்லாம் களையும் நாள் எந்நாளோ? அந்நாளோ தமிழ்த்தாய் மகிழும் நாள்!

May 5, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 24. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -1: இலக்குவனார் திருவள்ளுவன்

      05 May 2026      



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு தொடர்ச்சி)

கோப்புகளில் உள்ளவற்றைப் பார்ப்பதற்குச் சிறிது இடைவெளிவிட்டு இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் குறித்துப் பார்ப்போம்.

தமிழைக் கொலை செய்வதில் ஊடகங்கள் முதலிடம் வகிக்கின்றன. தமிழ் ஆர்வம் மிக்க ஊடகத்தினர் இருந்தாலும் பெரும்பான்மையாகக் கொலைகாரர்களே உள்ளனர். இவர்களுக்கெல்லாம் கடுந்தண்டனை விதித்தால்தான் தமிழ் வாழும். எனவே, இனியாவது ஊடகத்தினர்  கொலைகாரர்களாக இல்லாமல் தமிழை வாழ வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

இதைப் படிப்பவர்களாவது உணர்வு பெற்று ஊடகத்தினரைத் திருத்துவார்களாக!

இப்பொழுது நாம் இதழ்களில் இடம் பெறும் பிழை மலிந்த செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம்.

 கட்டுரைகளிலும் செய்திகளிலும் இலக்கிய வரிகளை மேற்கோளாகக் காட்டுவது வரவேற்கத்தக்கது. ஆனால் அவற்றில் பிழைகள் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சான்றுக்கு ஒன்று.

“பாரதிதாசனின் “கண்ணீரின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒரு கடுகாம்” என்ற கருத்தை ஒட்டியே தான் இதை எழுதியதாக விளக்கம் கொடுத்தேன்” என்கிறார் செய்தி எழுத்தாளர். ஆனால்,

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்”

என்பதுதான் சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் பாரதிதாசன் குறிப்பிட்டுள்ள நயம் மிகுந்த வரிகள். கண்ணைக் கண்ணீராகக் காட்டிவிட்டார் செய்தி எழுத்தாளர். இதைப் பாடலாசிரியர் தவறாகச் சொன்னாரா? அல்லது செய்தியாளர் தவறாக எழுதிவிட்டாரா என்று தெரியவில்லை. எனினும் அச்சில் வரும்பொழுது சரியாக வருவதில் கருத்து செலுத்த வேண்டாவா?

“இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.”  என்றொரு செய்தி.

டிரெண்டு என்பதைத் தமிழிலேயே குறிக்கலாமே!

 trend என்பதற்குப் போக்கு, நாட்டம், பாங்கு, பான்மை எனப் பொருள்கள். எனினும் பெருமளவு வரவேற்பைப் பெற்றுப் பரவலாவதால் “இக்காணுரை இப்போது பரவலாகி வருகிறது” எனலாம்.

பலரும் தமிழ்ச்சொற்களை அறிந்திருந்தும் ஒலிபெயர்ப்புச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர்.

சான்று சில:

“சார்கோல் மூலம் இயங்கும் இசுத்திரி பெட்டிகளையே நம்பியிருக்கிறார்கள்.”

அடுப்புக் கரியை அறியாதவரா செய்தியாளர்? ‘சார்கோல்’ என ஒலிபெயர்ப்பில் குறிப்பிட்டதற்குக் ‘கரி’ என்றே குறிக்கலாமே!

சாமீன் நிபந்தனையாக பாசுபோர்ட் முடக்க முடியாது’… அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு; ஐகோர்ட்

என்பது மற்றொரு செய்தி.

(ஞ்)சாமீன் என்னும் பாரசீகச் சொல்லின் முதன்மைப் பொருள் பிணை என்பதாகும்.

பிணை, பிணையம், பிணையாளி, பிணைக்கைதி முதலான பொருள்களில் இடத்திற்கேற்பப் பயன்படுத்தப்படுகின்றது. உத்தரவாதம், முன்பேறு, சான்று, சான்றாவணம், சான்றிதழ், நற்சான்று, சான்றுரை முதலாய பொருள்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பிணை என்னும் நல்ல தமிழ்ச்சொல் இருக்க சாமீன் என்னும் அயற்சொல் எதற்கு? கடவுச்சீட்டு என்பது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகையில் பலரறிந்த தமிழ்ச்சொல்லைப் புறக்கணிப்பது ஏன்? உயர்நீதிமன்றம்தான் தமிழைப் புறக்கணிக்கிறது என்றால் உயர்நீதிமன்றம் என்று தமிழில் குறிக்கத் தயக்கம் ஏன்? “கடவுச்சீட்டை நிபந்தனையாக முடக்க முடியாது.  … அதிகாரிக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு. – உயர்நீதிமன்றம்”  எனக் குறிக்கலாமே!

“ஆராகி கையெழுத்திடும் நிபந்தனை”  என்று ஒரு செய்தி.

 ஃகாசிர்(Hazir) என்பது அரபு மொழியில் இருந்து உருது, இந்தி, துருக்கி மொழிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதுவே ஆசர் ஆனது. ஆயத்தமாக, கிடைக்கக்கூடிய, பணியில் இருத்தல், தோற்றம், வருகை புரிதல், ஒருவர் அல்லது ஒரு குழுமுன் தோன்றுதல், முன் நிற்றல், நேர் நிற்றல் என இடத்திற்கேற்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.

எனவே, வருகை புரிந்து கையெழுத்திடும் நிபந்தனை எனக் குறிக்கலாம்.

இந்தக் கிழவனை தலையணை வைத்துக் கொள்ளுங்கள்” என்றும்

சிலிண்டரை பற்ற வைத்து இந்தக் கிழவனைக் கொள்ளுங்கள்” என்றும் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

வைத்துக் கொள்ளுதல், எடுத்துக் கொள்ளுதல் என்பன போன்று பொருள் வரும் வகையில் தலையணை வைத்துக் கொள்ளுங்கள் என்பது சரிதானா? உயிரைப் பறித்தல் என்னும் பொருளில் உயிரை எடுக்கும் கொல்லுதலைக் கொள்ளுதல் என்பது சரியாகுமா? இதனைத் தவறாக இடம் பெற்ற எழுத்துப் பிழையாகக் கருதுவதா? அல்லது பொருள் புரியாமல் பயன்படுத்தும் சொற்பிழையாகக் கருதுவதா?

இரண்டாம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லினம் மிக வேண்டுமல்லவா? அப்படியானால் சிலிண்டரைப் பற்ற வைத்து என்றுதானே குறித்திருக்க வேண்டும்.

சிலிண்டர் என்பது gas cylinder என்பதன் சுருக்கம். gasoline cylinder என்றும் gas bottle என்றும் குறிப்பர். gas என்பது காற்றை அல்லது வளியைக் குறித்தாலும் இங்கே எரிவதற்குப்பயன்படுத்தப்படும் வாயுவையே குறிப்பிடுகிறது. அங்கிங்கு எனாதபடி எங்கும் வாய்த்துள்ள காற்றை வாயு என்பதும் தமிழே. எனவே, எரி வாயு, அதனால் எரிவாயு உருளை எனலாம். உருளையைப் பற்ற வைப்பது என்றால், உருளையைப் பற்ற வைப்பது அல்ல. உருளையில் உள்ள எரிவாயுவையே. எனவே, செய்தியில் எரிவாயுவைப் பற்ற வைத்து எனலாம்.

“தி.மு.க-வுக்கு கூடுதல் இடங்கள்: தந்தி டி.வி சர்வே ரிசல்ட்”

 என வந்துள்ளது.

சர்வே ரிசல்ட் என்பது இந்த இடத்தில் ஆய்வு முடிவைக் குறிக்கிறது. எனவே,

தந்தித் தொலைக்காட்சி ஆய்வு முடிவு எனலாம்.

 நான்காம் வேற்றுமை உருபிற்கு அடுத்து வல்லெழுத்து மிகும் என்பது குறித்து முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். ‘தி.மு.க.வுக்குக் கூடுதல்’ என வர வேண்டும்.

“நெல்லை பயணிகளுக்கு குட் நியூஸ்… சென்னையில் இருந்து சிறப்பு ரயில்; டிக்கெட் போட செக் பண்ணுங்க”

என்பது ஒரு செய்தி.

ஊர்ப்பெயர்கள் பண்புத்தொகையாக வரும்பொழுது அடுத்து வரும்சொல் க,ச,த,ப என வல்லெழுத்தில் தொடங்கினால் வல்லெழுத்து மிகும். எனவே நெல்லைக்கு அடுத்து வல்லெழுத்து மிகுந்து

நெல்லைப்பயணிகள் என்று வர வேண்டும்.

செய்தியாளர்களுக்கு (குட்) நியூஸ் என்ற சொல்லுக்கான தமிழ்கூடத் தெரியாமல் இருந்தால் அது வெட்கக்கேடு அல்லவா?

இரயில் என்பது தண்டவாளத்தைத்தான் குறிக்கிறது.எனினும் பழக்கத்தில் தண்டவாளத்தில் செல்லும் தொடர் வண்டியைக் குறிக்கிறது. இதனைச் சுருக்கமாகத் தொடரி எனலாம்.

நெல்லைப்  பயணிகளுக்கு நல்ல செய்தி (அல்லது நற்செய்தி).      சென்னையில் இருந்து சிறப்புத்  தொடரி”  எனக் குறிப்பதே சிறப்பாகும்.

ticket என்றால் பொதுவான பொருள் சீட்டு, எனினும் இடத்திற்கேற்ப இரு சொல்லாக அமைந்து பயணச் சீட்டு, இசைவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு, குலுக்கல் சீட்டு என்பனபோல் குறிக்கப்பெறும். இங்கே பயணச்சீட்டைக் குறிக்கின்றது.  தொடரியில் இடம் கிடைக்கிறதா இல்லையா எனச் சரிபார்க்குமாறு செய்தி தெரிவிக்கிறது. எனவே, பயணச்சீட்டு கிடைக்கிறதா எனச் சரிபாருங்கள் எனலாம். அல்லதுஇன்னும் சுருக்கமாகப் “பயணச்சீட்டு கிட்டுமா எனப் பாருங்கள்”  எனலாம்.

Apr 17, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 23. எத்தனை, எத்துணை, எவ்வளவு வேறுபாடு

      17 April 2026      



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 22. அத்தனை, இத்தனை, எத்தனை ஆகியன அடுத்து வல்லெழுத்து மிகாது – தொடர்ச்சி)

இதே நேரம் நாம் எத்தனை, எத்துணை என்பவற்றை வேறுபாடு தெரியாமல் பயன்படுத்துகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும். உரிய வேறுபாட்டை நன்கு அறிந்து அதற்கேற்ப பயன்படுத்த வேண்டும்.

எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிப்பிடும். சான்றாக ஒரு புத்தகம், இரண்டு மடல்கள், மூன்று வீடுகள், நான்கு அறைகள், ஐந்து பேர்கள், ஆறு வகைகள், ஏழு குளங்கள், எட்டு வேலைகள், ஒன்பது குறிப்புகள், பத்து முறைகள் என்பன போல் எண்ணிக்கையைக் குறிப்பிடும் இடங்களில் எத்தனை என்னும் வினாச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும். 

அதே நேரம் அளவு, காலம், பயன், பருமன், பண்பைக் குறிப்பதற்கு எத்துணை என்னும் சொல்லப் பயன்படுத்த வேண்டும்.  பொதுவாக வியந்து சொல்லும் பொழுது எத்துணை என்பதைப் பயன்படுத்த வேண்டும்.

 எ. கா. 

எத்துணை பெரிய மலை

எத்துணை பெரிய கப்பல்

எத்துணை பெரிய கட்டடம்

எத்துணை காலம் தொன்மையானது

எத்துணை ஆண்டு பழமையானது

எத்துணை தடிமனான புத்தகம்

எத்துணை இனிமையானது

எத்துணை அழகு

எத்துணை நல்லவர்

எத்துணை நேரமாயிற்று

எத்துணை சிறிய பூச்சி

எத்துணை சிறிய வீடு

எத்துணை பருமனான கம்பு

எத்துணை நன்மை விளையும்

எத்துணை தீமை விளையும்

அத்துணை சிறந்த கோப்புகளும் எங்கே இருந்தன?

அத்துணை துயரக் குறிப்புகளையும் காண்க

அத்துணை நல்ல பள்ளிகளும் மூடப்பட்டே உள்ளன

அத்துணை நன்மை தரும் திட்டங்கள்

இத்துணை பெரிய கட்டடங்களும் சிதைந்த நிலையில் உள்ளனவா?

இத்துணை சிறிய கடிதங்களும் பார்க்கப்படவில்லையே!

இத்துணை சிதைந்த குடிசைகளும் எரிந்தனவா?

இத்துணை தீமை தரும் செயற்பாடுகள்

எத்தனை, எத்துணை சொற்களை அறியும் பொழுது எவ்வளவு என்னும் சொல் குறித்தும் அறிய வேண்டும்.

எவ்வளவு, எம்மட்டு. எவ்வளவாகிலும், எவ்வளவும், எவ்வள வேனும்,  எவ்வளவுக்கெவ்வளவு… அவ்வளவுக்கவ்வளவு, எவ்வளவும் என்பனவெல்லாம் அளவு குறித்தன.

எண்ணிக்கையைக் குறிப்பிடும் இடங்களில் எவ்வளவு என்று சொல்லக் கூடாது.

எத்தனை பால் கிடைக்கும் என்பது தவறு. எத்தனைப் படி பால் கிடைக்கும்? எத்தனை புதுப்படிப் பால் கிடைக்கும், எத்தனைப் பொதிவு (பாக்கெட்டு) பால் கிடைக்கும்? எத்தனைப் பொட்டலம் பாற்பொருள் கிடைக்கும்? என்பனபோல் வரலாம். ஆனால், எத்தனை பால் கிடைக்கும்? எத்தனை எண்ணெய் கிடைக்கும்? எத்தனை தண்ணீர் கிடைக்கும்? எனச் சொல்வன தவறாகும்.

ஒரு நாளைக்கு எத்தனை பால் குடிக்க வேண்டும்? எத்தனை தண்ணீர் குடிக்க வேண்டும்? என்பன தவறென உணரலாம். எவ்வளவு பால் குடிக்க வேண்டும்? எவ்வளவு தண்ணீர் குடிக்கவேண்டும் என வினவுவதே சரியாகும்.

ஆகவே, எண்ணிக்கையைக் குறிப்பிடும் இடங்களில் எத்தனை என்றும்  எண்ணிக்கையைக் குறிக்க முடியாத இடங்களில் எவ்வளவு என்றும் குறிக்க வேண்டும்.

ஒரு பகுதியில் வீடு பார்க்கப் போகிறோம். அங்கே எத்தனை வீடுகள் உள்ளன எனக் கேட்கலாம். ஆனால் எவ்வளவு வீடுகள் உள்ளன என்று கேட்கக் கூடாது. எத்தனை மின் கட்டணம் வாங்குவீர்கள் என்பது தவறு. எவ்வளவு மின் கட்டணம் வாங்குவீர்கள் எனக் கேட்க வேண்டும். இங்கே எவ்வளவு பூச்செடிகள் உள்ளன என்பது தவறு. எத்தனைப் பூச்செடிகள் உள்ளன என்பதே சரி. எத்தனை முறைதான் சொல்வது எனலாம். எவ்வளவு முறைதான் சொல்வது என்பது தவறாகும். எத்தனைத் தேர்தல்களில் வாக்களித்தீர்கள் எனலாம். எவ்வளவு தேர்தலில் வாக்களித்தீர்கள் எனக் கூடாது. எத்தனைத் தடவை போட்டியிட்டீர்கள் எனலாம். எவ்வளவு தடவை போட்டியிட்டீர்கள் எனக் கூடாது.

எத்தனை தண்ணீர் வரும் என்பது தவறு. எவ்வளவு தண்ணீர் வரும் என்பதே சரி. மிக மிகக் குறைவான அளவு நெல் இருப்பின் எண்ணமுடியும். அதுவே பெருமளவு இருக்கும் பொழுது எண்ணிக்கையில் சொல்லக் கூடாது. ஆதலின், எத்தனை நெல் விளையும் என்பது முறையல்ல. எவ்வளவு நெல் விளையும் என்பதே முறையாகும்.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்

என்பது ‘மலைக்கள்ளன்’ திரைப்படத்தில் வரும் பாடல். எழுதியவர் மருதகாசியா அல்லது வேறொருவரா என்னும் கருத்தாடல் இன்னும் உள்ளது. யார் எழுதியிருப்பினும் எத்தனை காலம் என்று சொல்லியருப்பது தவறுதான்.

எத்தனை எத்தனை  இன்பமடா எல்லாம் உனக்கே சொந்தமடா

என்பது  1963 ஆம் ஆண்டு வெளியான என்பது  1963 ஆம் ஆண்டு வெளியான ‘யாருக்குச் சொந்தம்’ திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு புகழ்பெற்ற தமிழ்த் திரையிசைப் பாடல்.  கவிஞர் அ. மருதகாசியால் எழுதப்பெற்றது.

எவ்வளவு இன்பம் என்றுதான் பாடியிருக்க வேண்டும். எனினும் இங்கே பெண்ணின்பம், பொருளின்பம்,  இயற்கை இன்பம், மலரின்பம் என வகைப்படுத்திப் பாடுவதால் எத்தனை வகை எனக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நாம் எத்தனை, எத்துணை, எவ்வளவு ஆகிய சொற்களின் வேறுபாடுகளைப் புரிந்து கொண்டு செவ்வனே பயன்படுத்த வேண்டும்.

Feb 4, 2026

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’: சரிதானா? – இலக்குவனார் திருவள்ளுவன்

      04 February 2026      கரமுதல



(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 20. குடியிருப்பு : தொடர்ச்சி)

எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 21. ‘காலனி’:  சரிதானா?

???  ஐயா, ‘காலனி’ என்றாலும் குடியிருப்புதானே

அவ்வாறுதான் நாம் பயன்படுத்தி வருகிறோம். காலோனியா /colōnia  என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே காலனி/colony என்னும் சொல். உண்மையில் ‘காலனி’ என்பது குடியேற்றப் பகுதியைக் குறிக்கும். அஃதாவது, குடியேற்ற ஊர், குடியேற்ற நகர், குடியேற்ற நாடு என எல்லாமே ‘காலனி’தான். பிரித்தானிய ஆட்சியில் இந்தியாவே அவர்களின் ‘காலனி’யாகத்தான் இருந்தது.

வேறொரு நாட்டால் உருவாக்கப்பட்டு  ஆளப்படும் பகுதியே ‘காலனி’ ஆகும். வெளிநாட்டினர் ஒன்றாக வாழும் வகையில் ஒரு குழுவைக் குடியேற்றும் ஒரு நிலம் என்றும் சொல்லலாம்.

குடியேற்ற நாடு, குடியேற்றம், புதுக்குடியிருப்பு, கடல் கடந்த குடியமைப்பு, நாடு கடந்த குடியினம், வந்தேறு குடி, நகரின் அயல்நாட்டுக் குடியிருப்பு, கட்டியாள்புலம், தொழிலாளர் தனிக் குடியிருப்பு, தனிக்குடியமைப்பு, குடியமைப்பிடம்,  கிரேக்கக் கடல்கடந்த குடியிருப்பு; குடியேற்ற நாடு, என்பவற்றுடன் இப்போதைய வழக்கத்தின் அடிப்படையில் குடியிருப்பு, கூட்டுவாழ்வு, சேரி, வாழிருப்பு  எனவும் இப்போது அகராதிகளில் குறிக்கப்பட்டுள்ளன.

colonial power – கட்டியாளும் வல்லரசு; colonialism – கட்டியாளுகை; colonialist laws – கட்டியாளும் சட்டங்கள்;  British colony – பிரித்தானியரின் கட்டியாள்புலம்;  என்று சொல்லப்படுகின்றன.

குடியேற்றப் பகுதி என்னும் பொருள் மாறி, இப்போது புதிதாக உருவாக்கப்படும் உள்நாட்டினருக்கான வாழ்விடமும் குடியிருப்பு என்றாகி விட்டது.சான்றாக

Labour Colony – தொழிலாளர் குடியிருப்பு,

Housing Board Colony – வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு என்பனபோல் பயன்பாட்டிற்கு வந்து விட்டன, பால இடங்களில் காலனி என்றே பதவிப்பெயரகளில் குறிக்கப்படுகின்ற தவறுகளும் இடம் பெறுகின்றன.

சான்றாகக் கலெக்டர் காலனி,டி.ஆர.ஓ.காலனி, ஆபிசர் காலனி, சர்வேயர் காலனி என்பனபோல் பயன்பாட்டில் உள்ளதைக் காணலாம். சில இடங்களில் காலணி எனத்தவறாகவும் பெயர்ப்பலகைகள் உள்ளன. காலில் அணியப்படும் காலணிக்கும் குடியிருப்புப் பகுதிக்கும் வேறுபாடு அறியாதவர்களாக மக்கள் உள்ளனர். எனவே, எல்லா இடங்களிலும் ஆட்சியர் குடியிருப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்பு, அலுவலர் குடியிருப்பு, நில அளவையர் குடியிருப்பு என்பன போல் தமிழிலேயே பெயர்ப்பலகைகள் குறிக்கப்பெற்றுப் பயன்பாட்டிற்கும் வர வேண்டும்.

உயிரியலில் bee colony- தேனீக் கூட்டம்

                        colony –  வாக்கம், குடியிருப்பு

வனத்துறையில்   

  Forestry            colony          தோப்பு (விதை/ஒட்டுமுறை)

மனை அறிவியலில்   micro colony      நுண்ணுயிர்க் குழுமல்

           colony hybridization    கூட்டுக் கலப்பினமாக்கம்

மருந்தியலில்           colony / bacterial colony            வளர்திரள்

கால்நடை அறிவியலில்   colony counter      நுண்மத் தொகுதிமானி

எனத் துறைச் சொற்களாக உள்ளன.

‘காலனி’யைச் சேரி என்றும் குறிப்பிடுகிறார்கள் அல்லவா? சேரி என்பது மக்கள் சேர்ந்து வாழும் பகுதியைக் குறிக்கும் நல்ல தமிழ்ச்சொல்.

கம்மாளர் சேர்ந்து வாழிடம் – கம்மாணசேரி

ஈழவர் சேர்ந்து வாழும் குடியிருப்பு – ஈழச்சேரி

வண்ணார் சேர்ந்து வாழிடம் – வண்ணாரச்சேரி

பிராமணர் குடியிருப்புப் பகுதி – பார்ப்பனச் சேரி

ஊர்த்தொடக்கத்தில் உள்ள புறவழிச்சேரி – தலைவாய்ச்சேரி

என்பன போல் வழக்கத்தில் இருந்துள்ளன.

“ஆலஞ்சேரி”(செங்கல்பட்டு), “வேளச்சேரி” (சென்னை), “மேச்சேரி”(சேலம்), “மட்டஞ்சேரி”(கொச்சி), “இரவுச்சேரி”( சிவகங்கை), “சங்கனாச்சேரி”(கேரளா), “பெரும்பச்சேரி”(பரமக்குடி), “ஒழிகினச்சேரி”(நாகர்கோவில்) என்பன போல் இப்போதும் நூற்றுக்கணக்கான ஊர்கள் உள்ளன.

சங்க இலக்கியங்களில் சேரி என்பது, சிற்றூர், தெரு, முல்லை நிலத்தூர் என்ற பொருள்களிலும் குறிக்கப்பெற்றள்ளன.

ஆனால் இப்பொழுது ‘காலனி’ / சேரி என்றால்

ஏழை எளிய மக்களால் குடியிருப்பிடமாகக் கொள்ளப்பட்ட பகுதி. இப்பகுதி ஒழுங்கு குலைந்த குடும்பங்கள், தரக்குறைவான குணாதிசயங்கள், ‘சுகாதார’மற்ற நிலைகள். அதிக மக்கள் தொகை மற்றும் சமூக ஒழுங்கு முறையற்ற தன்மை ஆகியவற்றை உடையதாகக் காணப்படும் என்று அகராதிகளில் குறிக்கும் நிலைக்கு வந்துள்ளது.

மேலும், தீண்டப்படாதார் சேர்ந்து வாழிடம், தீண்டாச்சேரி என்றும் குறிக்கப்பெறும் இழிநிலைக்கு வந்துள்ளது. ஒரு புறம் அதிகாரிகள் குடியிருப்புப்பகுதி ‘காலனி’ என அழைக்கப்பெற்றாலும்  அதற்கு முன்னரே ‘காலனி’-சேரி என்றால் தீண்டாதவர் வாழும் பகுதி என்று பழக்கத்திற்கு வந்து மன்பதையில் ஒரு பகுதியினரை இழிவாகக் கூறும் பழக்கம் வந்து விட்டது. எனவேதான், தமிழ்நாடு அரசு ‘காலனி’ என்று சொல்லும் பழக்கத்தை முற்றாக்கும் ஆணை பிறப்பிக்க உள்ளது.

“மண்ணின் ஆதிக் குடிகள் குறித்துத் தவறாக விளக்கும் வகையில் காலனி என்ற சொல் இடம் பெற்றுள்ளது. ஆதிக்கம், தீண்டாமையின் அடையாளமாகக் காலனி என்ற சொல் இனி நீக்கப்படும்” எனத் தமிழ்நாட்டு முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அரிசனக் காலனி என்று இருந்தால்  பூக்கள், மரங்கள், வரலாறு, நிலமபோன்றவற்றின் பெயர்கள் சூட்டத் திட்டமிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். ஆனால், காலனி என்பதற்கு மாற்றான சொல்லைப்பற்றிக் குறிக்வில்லை. முதல்வர் ஆறிவித்து ஒராண்டாகியும் ஆணை பிறப்பிக்கவில்லை என்றும் இதகால், காலனி என்ற பெயரே நீடிக்கிறது. இது குறித்துத் தினமலர் நாளிதழும் கவலை தெரிவித்துள்ளது.

மக்கள் தாங்கள் குடியிருக்கும் பகுதிக்குக் காலனி என ஆங்கிலத்தில் குறிப்படும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். காலனி என்னும் பயன்பாட்டையும் நீக்க வேண்டும். ஆங்கிலத்திலும் தமிழிலும் காலனி என்றே குறிக்கப்பட்டிருப்பின்  அவற்றைக் குடிமனைகள் என்று மாற்ற வேண்டும்.